டில்லி,
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்காது என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த வேண்டாம் என பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்று புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 20 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அதிமுக உறுப்பினர் வி.ஆர்.சுந்தரம் இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நெடுவாசல் கிராம மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தமிழக நெடுவாசல் போராட்டக் குழுவினர் நாளை மறுநாள் தம்மை சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்புக்கு தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ள தாக குறிப்பிட்டார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் பாலைவனமாக மாறும் என்ற கருத்து ஏற்க கூடிய தல்ல என்றும், அரசு எந்த திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதுகுறித்து முறையான சுற்றுச்சூழல் ஆய்வு நடைபெறுகிறது என்றும், தமிழகத்தில் வேறு சில இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது என்றும் கூறினார்.
தற்போது நாட்டில் வாகனங்களுக்கான எரிபொருள் தேவை அதிகரித்து உள்ளது. தற்போதைய சூழலில் 80 சதவீத எரிபொருள் இறக்குமதி செய்யப்படு கிறது. இவ்விவகாரத்தில் நெடுவாசல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.