டெல்லி:

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் என்சிசி மாணவர்களை ஈடுபடுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று 3வது ஸ்டேஜ் அடைந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் அதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்ட ஏராளமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவி உள்ளது.

இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட போதுமான சுகாதாரப் பணியாளர்கள் இல்லாத நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை எனப்படும் என்சிசி மாணவர்கள் பிரிவை சேர்ந்தவர்களை உபயோகப்படுத்த பாதுகாப்புத்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள துறைகளுடன் சேர்ந்து மாணவர்களும் பணியாற்றும் தொடர்பான வழிக்காட்டு முறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.