‘பிகில்’ படத்தின் வெற்றிக்கு பின்னர், பாலிவுட் திரையுலகில் கால் பதித்துள்ளார் அட்லீ. இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

மேலும் பிரியாமணி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ரெட் சில்லி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய , ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு ‘லயன்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக இப்படத்திற்கு ஜவான் என தலைப்பு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது லயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைதானார். அவருக்கு ஜாமீன் கிடைக்காததால், மன உளைச்சலில் இருக்கும் ஷாருக்கான், படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளாமல் இருக்கிறார்.

இதனால் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது. இதையடுத்து கால்ஷீட் பிரச்னை ஏற்படுவதால், அந்தப் படத்திலிருந்து விலக நயன்தாரா முடிவெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.