நாசிக்

வநிர்மாண் சேனா கட்சியினர் அமித் தாக்கரேவை தடுத்து நிறுத்திய சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி உள்ளனர்.

நேற்று இரவு நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரே நாசிக்கில் இருந்து மும்பை வந்தார். இரவு 9.15 மணியளவில் நாசிக் சின்னார், கோண்டே பகுதியில் உள்ள சுங்கச்சாவடிக்கு வந்த அவரது கார் பாஸ்ட்டேக் விவரங்கள் தவறாக இருந்ததாகத் தெரிகிறது. இதனால் அவர் சுங்கச்சாவடியில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் நவநிர்மாண் சேனா கட்சியினர் அந்த சுங்கச்சாவடிக்கு வந்தனர். அமித் தாக்கரே வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த ஆத்திரத்தில் அவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி அமித் தாக்கரே வாகனத்தை நிறுத்தியதற்காகச் சுங்கச்சாவடி ஊழியர்களை மன்னிப்பு கேட்க வைத்தனர். சுங்கச்சாவடியை  நவநிர்மாண் சேனாவினர் அடித்து நொறுக்கும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வாவி காவல்துறை அதிகாரி,

“இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்.  இங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். எங்களுக்கு இதுவரை சம்பவம் தொடர்பாகப் புகார் எதுவும் வரவில்லை.  ஆயினும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உள்ளோம்.” 

என்று தெரிவித்துள்ளார்.