விருதுநகர்: விருதுநகரில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை,  நரிக்குறவ இன மக்கள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, மத்திய கேபினட் கூட்டத்தில், நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க அனுமதி வழங்கி உள்ளது.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்,  நரிக்குறவர் இன மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக – அவர்களின் வாழ்வினை ஒளிமயமாக்க எனது தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து அடுத்தடுத்து சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், விருதுநகரில் முதல்வர் ஸ்டாலினை, நரிக்குறவ இன மக்கள் சந்தித்து தங்களது நன்றியினை தெரிவித்தனர்.  நரிக்குறவ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பல ஆண்டுகளாக மத்திய அரசை வலியுறுத்தி வந்த நிலையில், தங்களை  பழங்குடியின தகுதி பெற்றுத் தந்தமைக்காக நன்றி தெரிவிப்பதாக கூறினர்.