சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின்  ஆசிபெற்ற ‘நரிக்குறவ பெண் அஸ்வினி’ கொலை முயற்சி வழக்கில்  திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  வியாபாரிகளுக்கு கொலை  மிரட்டல் விடுத்ததாக கூறியதுடன், வியாபாரி பெண் ஒருவரை கத்தியால் கிழித்ததாக, அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நரிக்குறவர் பெண் அஸ்வினி, தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வாக்களித்தபடி உதவி செய்யவில்லை என பகீரங்கமாக குற்றம் சாட்டிய வீடியோ வைரலானது. இந்த நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அஸ்வினி,   “நான் என்ன தப்பு செய்தேன்? என போலீசார் வாகனத்தில் இருந்து கேள்வி எழுப்பினார்.

யார் இந்த அஸ்வினி?

திமுக ஆட்சிக்கு வந்ததும் பிரலமானவர் நரிக்குறவர் பெண் அஸ்வினி. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு,  கோவில் ஒன்றில் சாப்பிட சென்ற  தங்களுக்கு உணவு சாப்பிட அனுமதி மறுக்கிறார்கள் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம், மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் கோவிலில், இந்த பிரச்சனை இருப்பதாக அஸ்வினி தெரிவித்திருந்தார்.

அவரது பேட்டி, சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதை தனது அரசியல் லாபத்துக்காக மாற்றியது திமுக அரசு. உடனே மாமல்லபுரம் விரைந்து சென்ற இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர்  சேகர்பாபு, நேரடியாக கோவிலுக்கு, சென்று அஸ்வினியுடன் அமர்ந்து அதே கோவிலில் உணவருந்தி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது தங்களது வாழ்வாதாரத்துக்கு உதவிகளை செய்யும்படி அமைச்சரிடம் அஸ்வினி மற்றும் அவரது தரப்பு கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த . 2021 ஆம் ஆண்டு, தீபாவளி தினத்தன்று நேரடியாக பழங்குடியின பெண் அஸ்வினி வசிக்கும் பூஞ்சேரி பகுதிக்கு சென்று, நல திட்ட உதவிகளை வழங்கியதுடன்,   அஸ்வினியின் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தார்.  அத்துடன்  அங்குள்ள 81 குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கினார்.

மேலும், அவர்களுக்கு பழங்குடியினர், நரிக்குறவர் மற்றும் இருளர் ஆகிய சாதி சான்றிதழ்களையும் வழங்கினார். இவர்களுக்கு சுயதொழில் பயிற்சி திட்டம் மற்றும் கடன் உதவியும் வழங்கப்பட்டது. அதேபோல், அந்த மக்களின் குழந்தைகளுக்குக் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அங்கன்வாடி மற்றும் வகுப்பறைகள் கட்டித்தருவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. மேலும், அந்தப் பகுதியில் அடிப்படை வசதியான, சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவற்றையும் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்.

இதையடுத்து  முதலமைச்சர் முன்னிலையில் மேடையில் பேசிய நரிக்குறவர் பெண் அஸ்வினி , “இப்போது வரையில் எங்கள் மக்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தனர். ஆனால், தற்போது முதலமைச்சரால் எங்களுக்கு, ரேஷன் அட்டை முதல் ஆதார் அட்டை வரை அனைத்து ஆதாரங்களும் கிடைத்துவிட்டது. இதற்கு முதலமைச்சருக்கு நன்றி. இன்னும் எத்தனை ஜென்மங்கள் எடுத்திருந்தாலும், எங்களுக்கு இந்த பட்டா கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ரேஷன் அட்டைக்கு நான்கு மாதங்கள் நடக்கவேண்டியிருக்கும். ஆனால், முதலமைச்சரால் எங்களுக்கு இரண்டே நாட்களில் அதுவும் முதலமைச்சர் கையாலேயே கிடைத்துள்ளது. இதுவரை மனிதனாக எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தோம். தற்போது, பட்டா, ரேஷன் அட்டை என அனைத்து கிடைத்ததால், மனிதனாக அடையாளப்படுவோம். இதுவெல்லாவற்றுக்கும் முதலமைச்சருக்குத்தான் நன்றி. எங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த இடமும் எங்களுக்கு இருக்குமா என எங்க பசங்க பயந்து பயந்து வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க. ஆனால், இப்போ அந்த பயம் இல்லை. முதலமைச்சரால், நாங்கள் அங்கு வசிப்போம். தற்போது கொடுக்கப்பட்டுள்ள பட்டா, ஆதார் கார்டு, சாதி சான்றிதழ் மூலமா எங்க பசங்க படிப்பாங்க. ஒரு பத்தாவது வர படிச்சாக்கூட அவங்களுக்கு ஒரு வேலை கிடைச்சிடும்” என்று தனது வெள்ளந்தி வார்த்தைகளால் எதார்த்தத்தைப் பேசினார்.

பழங்குடியின பெண் அஸ்வினி மற்றும் அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்திருந்தார். முதலமைச்சரின் இந்த செயல் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளை பெற்றது. ஆனால் ஆண்டுகள் இரண்டு கடந்தும், அரசு வாக்குறுதி அளித்தபடி அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான முதலமைச்சரால் பாராட்டப்பெற்ற அஸ்வினியோ முதலமைச்சர் மற்றும் திமுக அரசுமீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார்.

கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இதுதொடர்பாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அஸ்வினி, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் அறிவித்த எந்தவொரு பலனும், தற்போது வரையில்  கிடைக்க வில்லை என கூறியுள்ளார். குறிப்பாக கடன் உதவி கொடுக்கப்பட்டு, கடைகள் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இருப்பினும் தற்போது வரையில் கடன் உதவி கிடைக்கவில்லை என கூறியுள்ளார். அதோடு கழிவறை கட்ட வருவதற்கு கொண்டுவரப்பட்ட செங்கலை கூட எடுத்து சென்று விட்டார்கள் என ஆதங்கத்துடன் தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தைய செயலுக்கு பாஜக மாநில தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை என்றும் தேர்தலுக்குப் பின் கொடுக்கின்ற வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள் என கூறியுள்ளார். இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்கள் சமூக நீதியா? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

அஸ்வினியின் இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. இது தமிழ்நாடு அரசுக்கும், திமுகவினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாமல்லபுரம் பகுதியில் பிற வியாபாரிகளை மிரட்டுவதாக மாமல்லபுரம் வியாபாரிகள் குற்றச்சாட்டுகள் முன் வைத்தனர். இதற்கு பின்னணியாக திமுகவினர் இருப்பதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர், சில மாதங்களுக்கு முன்பு , அஸ்வினியை மாமல்லபுரம் காவல் நிலையத்தில் அனைத்து விசாரணையும் மேற்கொண்டு இருந்தனர்.  அப்பொழுது அஸ்வினி, தான் அவ்வாறு செய்யவில்லை என்று விளக்கம் அளித்து இருந்தார். அதேபோல், வியாபாரிகளும் தங்கள் தரப்பு புகார்களை ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்திருந்தனர்.


இந்த நிலையில், மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் பகுதியில் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த விஜி என்பவரது மனைவி நதியா கடை அமைத்துள்ளார்.  அங்கு  கடை அமைப்பதில், அஸ்வினிக்கும் , நதியாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது .இதில் அஸ்வினி தனது கையில் இருந்த கத்தியை எடுத்து நதியாவை வலது தோள்பட்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நதியா கொடுத்த புகாரின்பேரில், அஸ்வினியை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்து உள்ளனர் தொடர்ந்து போலீசார் அஸ்வினியை திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். திருக்கழுக்குன்றம் மேஜிஸ்ட்ரேட் கதிரவன் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வினியை ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து போலீசார் அஸ்வினியை புழல் அடைத்தனர்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செய்தியாளர்கள் அஸ்வினியை சந்திக்க முயன்றனர். ஆனால், அவர்களை காவல்துறையினர் தடுக்கவே, போலீஸ் ஜீப்பில் இருந்த அஸ்வினி,   செய்தியாளர்களை பார்த்து, ” நான் என்ன தவறு செய்தேன்? எல்லோரும் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள், எனக்கு குழந்தை உள்ளது” என தெரிவித்தார்.

முதலமைச்சரே வீட்டிற்கு சென்று பார்த்த, பெண் ஒருவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாவம் அது பாட்டுக்கு பாசி ஊசி வித்து பிழைச்சுக்கிட்டு இருந்திச்சு… அது வச்சு ஒரு வாரம் நாடகம் போட்டு…. இப்போ அது எனக்கு தரறேன்னு சொன்ன வீடு எங்கே, கடை எங்கே, நீங்க சொல்லி இரண்டு வருஷமாச்சே என கேட்க, அதற்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, அப்பாவி இளம்பெண் மீது கொலை முயற்சி வழக்கு போட வைத்து, அவரை தூக்கி உள்ளே வச்சாச்சு…. 

Video: Thanks Behind woods