மும்பை: தற்போது இணையத்தில் வைரலாகியிருக்கும் புகைப்படம் ஒன்று   இந்தியாவின் இரு சிறந்த தொழிலதிபர்கள், தாம் மனிதப் பண்பிலும் சிறந்தவர்கள் என நிரூபித்த ஒன்றாகும். மும்பையில் நடந்த ஒரு பொது நிகழ்வின் போது, இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, ரத்தன் டாடாவின் கால்களைத் தொட்டு மரியாதை செலுத்தியதற்காக ட்விட்டரில் ஏராளமானோரின்  பாராட்டைப் பெற்றுள்ளார்.

புகழ்பெற்ற தொழிலதிபர்கள் பலர் மேடையைப் பகிர்ந்து கொண்ட அந்நிகழ்ச்சியில், ரத்தன் டாடாவுக்கு ஒரு விருதை வழங்கிய நாராயண மூர்த்தி, உடனே டாடாவின் கால்களைத் தொட்டார்.  அவரது இந்த செய்கையால் மிகவும் பணிவாக உணர்ந்த டாடா, மூர்த்தியைப் பாராட்டியதோடு அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவின் தலைப்பாக, “ஒரு சிறந்த நண்பர் நாராயண மூர்த்தியின் கைகளால் TIEcon வழங்கிய விருது‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. TIEcon இதை ஒரு ‘வரலாற்று தருணம்‘என்று குறிப்பிட்டதுடன், அந்த படங்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது.

இந்தியாவின் இவ்விரண்டு வெற்றிகரமான தொழிலதிபர்களும், பல்வேறு தர்மகாரியங்களுக்காகப் பெரிதும் அறியப்படுபவர்கள். அவர்கள், தொழிலதிபர்கள் என்ற அடையாளத்தைத் தாண்டி தங்களின் உயர் பண்புகளுக்காக சிறந்த மனிதர்களாக மதிக்கப்படுகிறார்கள்.

அவர்களுக்கிடையேயான நட்பு மற்றும் மரியாதையின் காரணமாக நிகழ்ந்த நல்லெண்ண வெளிப்பாடு மிகச் சிறந்த செயலாக இணையத்தில் போற்றப்படுகிறது.