பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா, ஐதராபாத்தில் உள்ள பசவதாரகம் இந்திய- அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

அவர் நடித்துள்ள ‘சீகரி’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய பாலகிருஷ்ணா “உலகை பெரும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ள கொரோனா வைரஸ் ஒரு நாளும் ஒழியாது” என அதிரடியாக தெரிவித்தார்.

“கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கண்டு பிடித்து வருவதாக செய்தி தாள்களில் அவ்வப்போது செய்திகளை படிக்கிறேன். ஆனால் கொரோனா வைரசுக்கு தடுப்பூசி வரப்போவதில்லை” என குறிப்பிட்ட பாலகிருஷ்ணா, “நான் கொரோனா வைரசுடன் வாழ பழகிகொண்டேன். நீங்களும் கொரோனா நோயுடன் சேர்ந்து வாழ பழகி கொள்ளுங்கள்” என கூறினார்.

“குளிர்ந்த தண்ணீரில் குளித்தால் கொரோனாவில் இருந்து குணமாகலாம் என சிலர் சொல்வதை நம்ப வேண்டாம்” என்று அறிவுறுத்திய பாலகிருஷ்ணா “சுடு தண்ணீரில் குளியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

– பா. பாரதி