டில்லி.
இஸ்லாமியர்களின் முத்தலாக் சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, முத்தலாக் சட்டத்தை முறைப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய அரசு கூறி இருந்தது.
முத்தலாக் சட்டம் குறித்து தலைமை நீதிபதி கெஹர் தலைமையில் 5 மதத்தை சேர்ந்த நீதிபதிகளின் அரசியல் சாசன பெஞ்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இன்று ஐந்தாவது நாளாக விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின்போது, முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பாக முன்னாள் அமைச்சர் கபில்சிபல் ஆஜரானார்.
அவர் கூறியதாவது, அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது எப்படி நம்பிக்கையோ, அதேபோல் முத்தாக் 1400 ஆண்டுகளாக முஸ்லீம்களால் பின்பற்றப்பட்டு வரும் நம்பிக்கை என்று வழக்கறிஞர் கபில் சிபல் கூறினார்.
மேலும் வாய்மொழியாக விவாகரத்து செய்வது என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. அயோத்தியில்தான் ராமர் பிறந்தார் என்பது நம்பிக்கை. அதில் எப்படி நீதிமன்றம் குறுக்கிடுவதில்லையோ, அதுபோல முத்தலாக் விஷயத்திலும் நீதிமன்றம் தலையிடக்கூடாது.
முத்தலாக் முறை 637ம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 1400 ஆண்டுகளாக பழக்கத்தில் உள்ளது. அந்த மதநம்பிக்கைக்கு சட்டக்குறுக்கீடு இருக்கக்கூடாது என்றார்.
மேலும், முத்தலாக் முறை குரானில் உள்ளது. அது இறைதூதர் முகமது நபிகள் காலத்திலும், அவருக்கு பின்பும் பின்பற்றப்பட்டு வருகிறது. மற்ற மதங்களுக்கு முன்பே இஸ்லாமில் பெண்களுக்கு சொத்தில் உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
குடும்பம் மற்றும் தனிநபர் சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்தால் பாதுகாக்கப்படுகிறது. அப்படி இருக்கும்போது நீதிமன்றம் முத்தலாக் விவகாரத்தில் தலையிடக் கூடாது.
இவ்வாறு கபில்சிபல் வாதாடினார்.