மும்பை:

மும்பையில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் இறந்தனர்.

மும்பையின் ஜூஹூ விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 10.20 மணியளவில் பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. இதில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் 5 பேர் மற்றும் 2 பைலட்டுகள் பயணம் செய்தனர். 10.30 மணியளவில் கட்டுப்பாட்டு அலுவலகத்துடன் ஹெலிகாப்டர் தொடர்பில் இருந்துள்ளது.

அதன்பின்னர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஹெலிகாப்டர் ஒஎன்ஜசி.யிலும் தரையிறங்கவில்லை. இது குறித்து கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஹெலிகாப்டரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஹெலிகாப்டரின் பாகங்கள் கடல்பகுதியில் சிதறி கிடப்பதை கண்டுபிடித்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. காணாமல் போன மற்ற 3 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.