சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து அறிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தற்போது 60வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்குவதாக அறிவித்து உள்ளது. அதன்படி, சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் டோக்கன் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை  மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், “மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் 2022 (அரையாண்டிற்கு ஒரு முறை) வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, அடுத்த அரையாண்டிற்கு ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை கீழ்காணும் 40 மையங்களில், வரும் 21 டிசம்பர் 2022 முதல் 31 ஜனவரி 2023 வரை காலை 08.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர், 01.02.2023 முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.

சென்னைவாழ் மூத்த குடிமக்கள், இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்,  மேலும், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன் தற்போதைய Passport Size அளவிலான ஒரு புகைப்படம் மட்டும் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.