சென்னை: ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா , சென்னையில் மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற 2,000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயாராக இருப்பதாக கூறினார்.

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, இன்று அதிகாலை முதல் சென்னையில் விடாமல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று பிற்பகல் கனமழையாக மாறும் என வானிலை ஆய்வுமையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மேயர் பிரியா, மழைநீர் வடிகால் பணிகள் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மழைநீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற 2,000க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும், முறிந்து விழும் மரங்களை அகற்ற 457 அறுவை இயந்திரங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், சாலைகளில் தேங்கும் மழைநீர் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவித்தவர், 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.