சென்னை: தமிழகத்தில் வரும் நவம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால்,  மேலும் கொரோனா தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை செய்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதுபோல தியேட்டர்களிலும் 100% இருக்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பண்டிகைகாலம் என்பதால், வியாபாரிகளும், முழுமையாக வியாபாரம் செய்யும் வகையில் தளர்வுகள் தர வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

அதுபோல, நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளதால், அதை காரணம் காட்டி மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது.

இதுதொடர்பாக இன்று  சென்னை தலைமைச் செயலகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த   ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.