டில்லி,
நாட்டில் தற்போது நிலவி வரும் பணத்தட்டுபாடு டிசம்பர் 30க்கு பிறகும் நீடித்தால் மோடி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர்.
கடந்த 8ந்தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியிட்டபோது,  பிரதமர் மோடி, 50 நாட்களுக்குள் பணப்பிரச்சினை தீர்ந்து விடும் என்று பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் இன்றுவரை பணப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை. பொதுமக்கள் வங்கிகளின் வாசல்களில் காத்திருக்கும் நிலையே நீடித்து வருகிறது. சாமானிய மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நிறைவு பெற்றபோது, மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக 16 கட்சிகளை ஒருங்கிணைத்து போராடினார்.
அதைத்தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசிக்க, டில்லியில் ராகுல், மம்தா கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு எதிராக மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக, மதச்சார் பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஐயூஎம்எல், ஏஐயூடிஎப் ஆகிய 8 கட்சிகள் பங்கேற்றன.
இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி,  பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்தன.
இந்த கூட்டத்தில் பண மதிப்பிழப்புக்கு  எதிராக எதிர்க்கட்சிகள் இடையே குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்க  தீர்மானிக்கப் பட்டது.
நடைபெற்று முடிந்த ஆலோசனை கூட்டம் குறித்து  ராகுல்காந்தி, மம்தா கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
ராகுல் காந்தி கூறியதாவது:
‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை எனும் தன்னிச்சையான பொருளாதார பரிசோதனை முயற்சியை உலக வரலாற்றில் முதல்முறையாக பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். இதுபோன்ற பரிசோதனையை சீனாவில் மாவோ ஆட்சிக்காலத்தில் கூட செய்யவில்லை.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, கறுப்புப் பணத்தின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. மாறாக நாட்டு மக்களின் பொருளாதார சுதந்திரத்தை பறித்துவிட்டது. தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.
மம்தா பானர்ஜி கூறியதாவது:
‘நாடாளுமன்றத்தைப் பொருட்படுத்தாது, இவ்வளவு பெரிய முடிவை பிரதமர் எடுத்திருக்கிறார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இதுதான் மிகப்பெரிய ஊழலாக இருக்கும். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்படும் சிரமங்கள் தீர, 50 நாட்கள் அவகாசம் வேண்டுமென பிரதமர் கேட்டார்.
மக்கள் தங்களது  வாழ்வாதாரத்தை இழந்தபோதிலும், பட்டினியால் இறக்க நேரிட்டாலும், அவகாசத்தை  அளித்தார்கள். 48 நாட்கள் கடந்துவிட்டன. 50 நாள் கெடு முடியப்போகிறது. இன்னும் 2 நாட்கள்தான் உள்ளது. நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். நிலைமை சீரடையாமல் இது போன்ற சூழலே தொடருமானால், அதற்கு பொறுப்பேற்று, பிரதமர் பதவியை ராஜினாமா செய்வீர்களா?’ என்றார்.
திமுக எம்பி திருச்சி சிவா கூறியதாவது:  ‘புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், பெரும் பொருளா தார பிரச்சினையை நாடு எதிர்கொண்டுள்ளது.
வெறும் 6 சதவீத கறுப்புப் பணம் மட்டுமே ரொக்கமாக உள்ளது. இதை குறிவைப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள மக்களைப் பிரதமர் பிரச்சினைக்கு ஆளாக்கி விட்டார். இந்நடவடிக்கையால் இது வரை எந்த பலனும் கிடைக்க வில்லை.
எதிர்காலத்தில் கறுப்புப் பணம் உருவாகாது என்பதற்கு இத்திட்டத்தில் எந்த உத்தரவாதமும் இல்லை. வங்கிகளில் எவ்வளவு கறுப்புப் பணம் செலுத்தப்பட்டது, எவ்வளவு மீட்கப்பட்டது போன்ற புள்ளிவிவரங்களும் இல்லை.
ஆக, தவறாக திட்டமிட்டு, மோசமாக செயல்படுத்தப்பட்ட நடவடிக்கையாகவே இதை கருத வேண்டியிருக்கிறது’ என்றார்.
பண மதிப்பு நீ்க்க நடவடிக்கைக்கு ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அக்கட்சியைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் யாதவ் குறிப்பிட்டார்.