சென்னை

ந்த மாதம் 9 ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார்.

நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மேலும் இம்முறை தமிழக பாஜகவும், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரக் களப்பணியாற்றி வருகிறது.

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, நெல்லை, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கும் சென்று பாஜக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தி.மு.க மற்றும் இந்தியா கூட்டணி குறித்து கடுமையாக விமர்சித்தார்.

பிறகு கோவையில் பிரதமர் மோடி வாகன அணிவகுப்பு நடத்தியபோது, சாலையின் இருபுறங்களிலும் பா.ஜனதா தொண்டர்கள், பொது மக்கள் அவருக்கு மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தார்கள். தற்போது சென்னையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் மேற்கொள்ளப் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்., வருகிற 9-ஆம்தேதி, சென்னைக்குப் பிரதமர் மோடி வருகை தர திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாஜக சென்னையில் பிரமாண்ட வாகன அணிவகுப்பு நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், தென்சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆகியோருக்கு ஆதரவாக மோடி பிரசாரம் செய்ய திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு ஆய்வுகள் குறித்து, பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விரைவில் பயணத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.  இதன் தொடர்ச்சியாக, பிரதமர் மோடி நீலகிரி, பெரம்பலூர், வேலூர் ஆகிய தொகுதிகளிலும் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.