டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்துள்ளது. ஒரே தேசம், ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும், மக்களவை மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், மோடி அரசால், இந்த சட்டத்தை அமல்படுத்த முடியுமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் நவம்பர் டிசம்பர் மாதங்களில், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளன. இந்த நிலையில்,   ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை செயல்படுத்துவதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில்  பிரதமர் நரேந்திர மோடி அரசு ஒரு குழுவை  அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த தேர்தல்கள் அவ்வப்போது வருவதால், செலவினம் பிடிப்பதாக கருதப்படுகிறது. அதனால், செலவினத்தை குறைக்க ஒரே நேரத்தில், சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்துள்ளது.  ஆனால், மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையில்,  செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  இந்த கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 இந்j நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்பு குழுவை அமைத்துள்ளது மத்திய அரசு. இக்குழு அளிக்கும் தகவல் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என தெரியவந்துள்ளது.

கடந்த  2014 லோக்சபா தேர்தல் அறிக்கையில், சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான வழிமுறையை உருவாக்குவதாக பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்துவதைக் குறிக்கிறது. பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விவகாரம் குறித்து பலமுறை பேசியுள்ளனர், மேலும் இது 2014 மக்களவைத் தேர்தலுக்கான கட்சியின் அறிக்கையின் ஒரு பகுதியாகவும் இருந்தது.

2014ம் ஆண்டைய பாஜகவின் தேர்தல் அறிக்கையின் பக்கம் 14ல்,  “குற்றவாளிகளை ஒழிப்பதற்காக தேர்தல் சீர்திருத்தங்களைத் தொடங்க பாஜக உறுதிபூண்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் கலந்தாலோசித்து, ஒரே நேரத்தில் சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களை நடத்தும் முறையை உருவாக்க பாஜக முயற்சிக்கும். தேர்தல் செலவைக் குறைப்பதைத் தவிர. அரசியல் கட்சிகள் மற்றும் அரசு ஆகிய இரண்டிற்கும், இது மாநில அரசுகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும். செலவின வரம்புகளை யதார்த்தமாக திருத்துவதையும் நாங்கள் பார்ப்போம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து,  கடந்த 2016ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பேசிய பிரதமர் மோடி, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார். இந்த கூட்டத்தை பல எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன.

இந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு  இதுதொடர்பாக கமிட்டி அமைத்து  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வெளியானது முதல், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற ஊகங்கள் நிலவி வருகின்றன. அமர்வு, ஆனால் அரசாங்கத்தில் இருந்து யாரும் இதை இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா.  ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது புதிய பிரச்னை அல்ல. பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்று வெறித்தனமாக உள்ளது. ஒரே தேசம், ஒரே வரி, இப்போது ஒரே தேசம், ஒரே தேர்தல்; பிறகு ஒரே தேசம், ஒரே கட்சி; ஒரே தேசம், ஒரே தலைவர். இதுதான் பிஜேபியின் ஆவேசமாக இருக்கிறது” என்று  கூறினார்.

மேலும், “எங்கள் ஜனநாயகத்தில் பாராளுமன்றம் மிக உயர்ந்தது என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார், ஆனால் பாஜக பாராளுமன்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. பெருகிய முறையில், எங்கள் பாராளுமன்றம் பணிநீக்கம் செய்து வருகிறது. ஆனால் அவர்கள் ஒரு சிறப்பு அமர்வை அழைத்தனர். அதன் நோக்கம் என்னவென்று யாருக்கும் தெரியாது என்றார்.

ஏற்கனவே ஒரே தேர்தல்  நடைமுறை 1967 வரை அமலில் இருந்துள்ளது. 1968-69ல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில மாநில சட்டசபைகள் முன்கூட்டியே கலைக்கப்பட்ட பிறகு இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டது. அதுபோல, நாடாளுமன்றமும்   முதன்முறையாக 1970 இல் திட்டமிடப்பட்டதற்கு ஒரு வருடம் முன்னதாக கலைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தே 1971 இல் இடைக்காலத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதன்பிறகே சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பாஜக அரசு, இந்த நடைமுறையை மீண்டும் பழைய நடைமுறைக்கு மாற்ற முயற்சித்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளில் இதுபோன்று சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். முன்னதாக, கடந்த 2017 ஜூன் 30-ல் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்டு ஜிஎஸ்டி சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சிறப்பு அமர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அமர்வில் ஒரே தேசம் ஒரே தேர்தல் சட்டம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத் திருத்தமும், மக்களவை மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவர வேண்டும் எனச் சொல்லப்படுதற்கு முதல் காரணமாக செலவினக் குறைப்பு உள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் 60 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட்டது. இது அரசியல் கட்சிகள் தேர்தல் செலவினங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த நிலையில் ஒரே நேரத்தில் மக்களவை, மாநிலங்களவைத் தேர்தலை நடத்தினால் செலவுகள் குறையும் என்று இதனை ஆதரிக்கும் தரப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தினால் தங்களால் செலவுகள் அடிப்படையில் தேசிய கட்சியை எதிர்கொள்ள முடியாது என்பதே பிராந்திய கட்சிகளின் முக்கிய வாதமாக இருக்கின்றது.

அதுமட்டுமன்றி அவ்வாறு ஒரே தேர்தல் நடத்தும்போது உள்ளூர் பிரச்சினைகள் கவனம் பெறாமல் போய்விடும் என்றும் பிராந்தியக் கட்சிகள் கவலை தெரிவிக்கின்றன. இதனால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.