டில்லி:
பிரதமர் மோடியின், “நமோ ஆப்” என்னும் செல்போன் செயலியை பதவிறக்கம் செய்பவர்களின் தனிநபர் ரகசியங்கள் திருடப்படுவதாக வெளியான தகவலை வைத்து ராகுல் காந்தி கிண்டலடித்திருக்கிறார்.
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு ரகசியமாக குற்றச்சாட்டு வெடித்தது.
இந்தக் குற்றச்சாட்டை உண்மை என்று ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், இதற்காக வருத்தம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் ஓய்வதற்குள் இன்னொரு சர்ச்சை எழுந்தது.
இந்திய பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் குறுந்தகவல் மற்றும் இ-மெயில் அனுப்பவும், உடனடியாக பதில் தகவல் பெறவும் வசதியாக, ‘நமோ ஆப்’ என்னும் ‘நரேந்திர மோடி மொபைல் செயலி’ என்ற சேவை தொடங்கப்பட்டது. இந்த ஆப்பை பொதுமக்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.
இதை பயன்படுத்தி நேரடியாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் பெற முடியும் என்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இந்த செயலி பெரிதளவில் உதவிகரமாக இருக்கும் என்று மத்திய ஆளும் பா.ஜ.க. அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த ஆப் மூலம் மக்களிடன் அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக ஆதாரங்களுடன் தகவல் வெளியானது.
மோடி ஆப் என்னும் இந்த செயலிக்குள் ஊடுருவியதாக அறிவித்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ‘ஹேக்கர்’ எல்லியட் அல்டர்சன் என்பவர், இந்த செயலியை பயன்படுத்தும் நபர்களின் பெயர், புகைப்படம், பாலினம் போன்ற ரகசிய குறிப்புகள் அனைத்தும் அவர்களின் சம்மதம் இல்லாமலேயே http:n.wzrkt.com என்னும் மையதளத்தை சென்றடைவதாக ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலை பா.ஜ.க. அரசு மறுத்துள்ளது.
இந்நிலையில், ராகுல்காந்தி இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்.. “ ஹாய்.., என் பெயர் நரேந்திர மோடி. நான் இந்தியாவின் பிரதமர். என்னுடைய அதிகாரப்பூர்வ ’ஆப்’பில் உங்களை பதிவு செய்து கொண்டால் உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அமெரிக்காவில் இருக்கும் எனது நண்பர்களின் கம்பெனிகளுக்கு தந்து விடுவேன்’ என ராகுல் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.