நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன.

சட்டபூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமான @SeemanOfficial இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக அந்தப் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் இதற்கான காரணம் குறித்து சரியான தகவல் இல்லை.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துவந்த நிலையில், “கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல. ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.