சென்னை: திமுக ஆட்சி பதவி ஏற்ற இரண்டரை வருடத்தில் 34 ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

சென்னை அறநிலையத்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  15 ஓதுவார்களுக்குப் பணி நியமன ஆணைகளை  அமைச்சர் சேகர்பாபு வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 5 பெண் ஓதுவார்கள் உட்பட மொத்தம் 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டு உள்ளது என்றவர்,  கடந்த இரண்டரை வருட திமுக ஆட்சியில் 34 ஓதுவார்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர்; மொத்தமாக 107 ஓதுவார்கள் தமிழகம் முழுவதும் பணியில் உள்ளனர் என்றார்.

“ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்ய நினைப்பவர்கள் தான் கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டியவர்,  தமிழில் இறைவனை பாடி வழிபடும் நோக்கில் ஓதுவார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், தமிழகம் முழுவதும் தற்போது 10 பெண் ஓதுவார்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆணை வழங்கப்பட்ட 3 பெண் அர்ச்சகர்கள், உதவி அர்ச்சகர்களாக திருக்கோயில்களில் நியமிக்கபட உள்ளனர்; 11 பெண் அர்ச்சகர்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சனாதான விவகாரம் தொடர்பாக  உச்சநீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் பதில் அளித்தார்.