திருவண்ணாமலை

முதல்வர் ஸ்டாலின் வெளிநாடுகளில் இருந்து முதலீடுகள் ஈட்டி வேலைவாய்ப்பை உருவாக்குவதாக அமைச்சர் எ வ வேலு கூறி உள்ளார்.

இன்று திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில்  கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் அருணை பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலி பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களை தேர்வு செய்தனர்  காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற  இந்த முகாமில் ஆயிரக்கணக்கான வேலைநாடுனர்கள் பங்கேற்றனர்.

ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கிய இந்த முகாமுக்கு. துணைச் சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

அமைச்சர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குப் பணி நியமன ஆணை, மகளிர் திட்டம் மூலம் 147 சுய உதவி குழுக்களுக்கு ரூ.12.98 கோடிக்கான கடனுதவி, 51 தொழில் முனைவோருக்கு ரூ.14.02 கோடி கடனுதவி போன்றவற்றை வழங்கி பேசினார்.

அவர் ,

”மாணவர்கள் படித்து முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் மட்டும் போதாது என்பதால் அவர்களுக்கு பணிகள் குறித்து வழிகாட்ட வேண்டும் என்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை உருவாக்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு வருவதன் மூலமாக தான் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்பதால் முதல்வர் வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் முதலீட்டாளர்கள் முகவரி என்ற நிகழ்ச்சியை நடத்திப் பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடுகளாக ஈட்டி அதன்மூலமாக வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளார்.”

என்று உரையாற்றினார்.