சென்னை:
மைச்சர் கடம்பூர் ராஜூ வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த விவகாரத்தில் அமைச்சர் மீது புகார் அளித்த அதிகாரி வேறு தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள், அமலில் உள்ளதால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை முன்னிட்டு, ஊத்துப்பட்டி விலக்கு அருகே நேற்று தேர்தல் பணியாற்றும் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக காரில், கடம்பூர் ராஜு வந்திருக்கிறார். அவருடன், ஆதரவாளர்களும் காரில் வரிசையாக வந்துள்ளனர்.

அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள், கடம்பூர் ராஜுவின் காரை நிறுத்தி சோதனையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், காரிலிருந்து இறங்கி ‘இன்னும் பத்து நாளைக்குத்தான் நீ ஆடுவ.. அதுக்குப்பிறகு உன்னை என்ன பண்ணுறேன் பாரு..’ என்று பறக்கும்படை குழுத் தலைவரை மிரட்டியுள்ளார். அப்போது அவர் ‘எங்கள் கடமையைத்தான் நாங்கள் செய்கிறோம். ஒத்துழைப்பு கொடுங்கள்’ என கூறியுள்ளார்.

ஆனால், அமைச்சர் எந்த விளக்கத்தையும் கேட்காமல், தொடர்ந்து அவரை ஒருமையில் பேசியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தேர்தல் பறக்கும்படை குழுத் தலைவர், உயிர் பயத்தில் நாலாட்டின் புதூர் காவல்நிலையத்தில் அமைச்சர் மீது புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த விவகாரத்தில் அமைச்சர் மீது புகார் அளித்த அதிகாரி வேறு தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.