நியூயார்க்

த்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஐநா சபையில் இந்தியாவை பாரதம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

அண்மையில் ஜி-20 மாநாட்டுப் பிரதிநிதிகளுக்குக் குடியரசுத் தலைவர் அளித்த விருந்துக்கான அழைப்பிதழில், ‘இந்தியக் குடியரசுத் தலைவர்’ என்பதற்குப் பதிலாக ‘பாரத குடியரசு தலைவர்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் ஜி-20 மாநாட்டில், பிரதமர் மோடி இருக்கைக்கு முன்பிருந்த மேஜையில், ‘பாரத பிரதமர்’ என்ற பெயர்ப் பலகை காணப்பட்டது. அது மட்டுமின்றி மாநாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும் ‘பாரதம்’ என்ற பெயரே இருந்தது.

இதனால், நாட்டின் பெயரை ‘பாரதம்’ என்று மாற்றப்போவதாகச் சர்ச்சை எழுந்தது

நேற்று ஐ.நா. பொதுச்சபையிலும் ‘பாரதம்’ என்ற பெயர் எதிரொலித்தது. நேற்று நடந்த ஐ.நா. பொதுச்சபை மண்டபத்தில் ஐ.நா. பொதுச்சபையின் உயர்மட்ட அமர்வு பொது விவாதத்தில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.

அவர் பேசத்தொடங்கும்போது, தனது இரு கைகளைக் குவித்து ”பாரதத்தின் வணக்கம்” என்று வணக்கம் தெரிவித்தார். மேலும் தனது 17 நிமிட பேச்சின் முடிவிலும் பாரதத்தைக் குறிப்பிட்டார். ”பாரம்பரியத்தை மட்டுமின்றி, தொழில்நுட்பத்தையும் சமமாக நாங்கள் பின்பற்றி வருகிறோம். பாரதத்தை இந்த கலவைதான் வரையறுக்கிறது” என்று அவர் கூறினார்.

அமைச்சரின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.