டில்லி
மத்திய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாஜகவுக்கு ‘இந்தியா’ கூட்டணி ஒரு சவால் தான் எனத் தெரிவித்துள்ளார்.
நேற்று மத்திய அமைச்சரும்,பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார்.
பேட்டியில் அவர்.
”பாஜகவோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியோ எந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது இல்லை. ஒவ்வொரு தேர்தலையும் அடிமட்ட தொண்டர்கள் முதல் மேலிடத் தலைவர்கள் வரை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். எங்களைபிரதமர் மோடி முன்வரிசையில் நின்று வழி நடத்துகிறார்.
வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை, பிரதமர் மோடி 3-வது தடவையாக நாட்டுக்குச் சேவையாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் பாஜகவின் செயல்திட்டம். பாஜகவுக்கு எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி, உண்மையிலேயே சவாலானதுதான்.
இந்த தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினரான நான் ஒடிசாவில் போட்டியிடக் கட்சி மேலிடத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளேன். பிரதமர் மோடி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி, தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகாரம் அளிப்பதில் முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி மகளிர் மசோதாவைக் காலாவதி ஆக செய்து விட்டது. இது குறித்து காங்கிரஸ் தனது ஆட்சிக்காலத்தில் எந்த அக்கறையும் காட்டவில்லை. காங்கிரசின் கைகளை யாரும் கட்டிப்போடவில்லை. அவர்கள் மசோதாவை நிறைவேற்ற வாய்ப்பு இருந்தபோதிலும், அதைச் செய்யவில்லை.
என்று தெரிவித்துள்ளார்.