சென்னை: நாங்குநேரி சம்பவத்திற்குப் பொறுப்பேற்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முனியாண்டி – அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகன் வள்ளியூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். அதே பள்ளியில் படிக்கும் நாங்குநேரியைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 9-ம் தேதி இரவில் முனியாண்டியின் வீட்டுக்குள் புகுந்து மாணவரையும், அவரதுதங்கையையும் அரிவாளால் வெட்டினர். இதனால் படுகாயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தை பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் அதிர்ச்சியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அறிவாயுதம் ஏந்த வேண்டிய வயதில் பள்ளி மாணவர்கள் அரிவாளைத் தூக்கும் அளவிற்கு சமூகத்தில் சாதிவெறி பரவி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சூழலில், நாங்குநேரியில் பள்ளி மாணவரை சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் தொடர்பாக அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒருநபர் குழுவை முதல்வர் மு.க. ஸ்டாலின் அமைத்துள்ளார்.

நாங்குநேரியில் வீடு புகுந்து சக மாணவர்களால் வெட்டி படுகாயம் அடைந்து, நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12 ஆம் வகுப்பு மாணவன் மற்றும் அவரது சகோதரி ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மாணவனின் தாயாரை நேரில் சந்தித்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து தேவையான உதவிகளை செய்து கொடுப்பதாக உறுதி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “நாங்குநேரி பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை ஆகியோரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இருவரும் நலமுடன் உள்ளனர். அவர்களுக்கு நல்ல மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவன் இன்னும் சில நாட்கள் ஐசியூவில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மாணவனின் உடலில் கிட்டத்தட்ட 21 இடங்களில் வெட்டுக்காயம் உள்ளது. வலது கை, வலது காலில் கொடுங்காயங்கள் ஏற்பட்டுள்ளது. ஒரு அறிவாளால் 3 மாணவர்கள் சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவனை வெட்டி உள்ளனர். இதில் ரத்தக் குழாய், கை, கால் உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளன. மாணவன் மீண்டும் இயல்பாக இயங்கும் வகையில் மருத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

 பள்ளி மாணவர்களிடையே நச்சுக் கருத்தை பரப்புவது புதிது அல்ல. மாணவர்கள் மத்தியில் மத ரீதியான, ஜாதி ரீதியான மோதலை திட்டமிட்டு சிலர் பரப்பி வருகின்றனர்.  மேலும் பாதிக்கப்பட்ட மாணவனின் தாய்க்கு நல்ல வீடு வழங்க வேண்டும். மாணவர்கள் கல்வி பயில உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களை பாதுகாப்பாக மாற்றுப் பள்ளியில் படிக்க வைக்க அரசு ஆவண செய்ய வேண்டும்.

வேதம் புதிது படத்தில் பாரதிராஜா இறுதிக் காட்சிகளில் சொல்லியிருக்கும் காட்சிகள் தான் இப்போது சுட்டி காட்ட வேண்டியுள்ளது. தீவிரவாத அமைப்புகளை கண்காணிக்க தனி உளவுப் பிரிவு இருப்பது உள்ளது போல், சாதிய ரீதியான பிரிவுகளையும் கண்காணிக்க தனி உளவு பிரிவை அரசு உருவாக்க வேண்டும். கந்துவட்டி கும்பல்களை அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வள்ளியூர், நாங்குநேரி பகுதிகளை வன்கொடுமை பகுதிகளாக அரசு அறிவிக்க வேண்டும்.

ஆணவக் கொலைகள், கந்துவட்டிகளால் ஏற்படும் வன்முறைகள் அதிகம் நடந்து வருகின்றன. நெல்லை தூத்துக்குடி பகுதியில் ஜாதியின் பெயரால் நடந்து வரும் வன்முறைகளை அரசு கூடுதல் கவனம் செலுத்தி தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென் மாவட்டங்களில் நடக்கும் சாதிய வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி வரும் 20ஆம் தேதி நெல்லையில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, விடுதலைசிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சங்கத்தமிழன் கூறுகையில், நாங்குநேரி சம்பவத்திற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும்,  பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷிடம் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை” என்று அவர் குற்றம் சாட்டியுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இந்த அறிவிப்பு  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, சாதிய வன்முறைகள் அதிகரித்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் அமைப்பு திமுகமீது அதிருப்தியில் உள்ள நிலையில், தற்போது கட்சியின் மாநில இளைஞரணி தலைவர், அமைச்சர் பதவி விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள சமூக செயல்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், திமுக ஆட்சியில்  சாதிய கொடுமைகள் அதிகரித்து உள்ளதாகவும்,  சாதிய கொடுமைகள் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். சாதி ரீதியிலான பிரச்சினைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.