சென்னை: சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம்  புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரணம் தொகை வேண்டிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

டிசம்பர் 4ந்தேதி ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்த மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை உள்பட சுற்றுவட்டார மாவட்டங்கள், டிசம்பர்  3, 4ம் தேதிகளில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் கடுமையான சேதங்களை எதிர்கொண்டன. இந்த  மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கக்கூடிய பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. ஏராளமான மரங்கள் முறிந்த விழுந்தனர். இந்த புயல் காரணமாக, மின்சாரம் மற்றும் தொலை தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் உதவி கோர முடியாத நிலையிலும், குடிநீர், குழந்தைகளுக்கு பால் கூட கிடைக்காத  இழிநிலைக்கு தள்ளப்பட்டனர்.

புயல் வெள்ளம் பாதிப்பை தொடர்ந்து,  பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு  பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும்,  மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். சென்னையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள், மற்ற 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படுகிறது

இந்த நிலையில், சென்னையில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாவட்டத்தோருக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

அதன்படி இந்த 4 மாவட்டங்களில் வசித்து வெளி மாவட்டங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்போர் விண்ணப்பிக்கலாம். வெள்ளத்தால் பாதித்த வெளி மாவட்டத்தை சேர்ந்த நபருக்கு நிவாரண விண்ணப்பம் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிவாரண  விண்ணப்பத்தில் வங்கி எண், இடம் ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்தின் அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் குறித்து முடிவு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வருவாய்த்துறை சார்பில் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  வெள்ள நிவாரணத்திற்காக  தமிழ்நாடு  அரசு ரூ.2,000கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.