சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்புகளை சீர் செய்ய,  நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி தேவை மத்திய குழுவிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

நிரந்தர நிவாரணத் தொகை – முதல்வர் கோரிக்கை புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடி வழங்கிட வேண்டும் மத்திய குழுவுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ.7033 கோடி வழங்கவும் முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யாத்ரி அவர்களிடம் மிக்ஜாம் புயல் பாதிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கான கோரிக்கை மனுவினை (Memorandum) அளித்தார்.

தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 3ந்தேதி, 4ந்தேதி சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பொழிந்தது. இதனால் சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதந்தன.  இதையடுத்து, தமிழக முதலமைச்சரின் அழைப்பின் பேரில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்து, மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து மத்தியஅரசு தமிழ்நாடு வந்து ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி மத்திய குழு டிசம்பர் 11ந்தேதி இரவு சென்னை  வந்தது. மத்திய குழுவின் தலைவராக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர்  குணால் சத்யார்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்து வெள்ள சேதத்தை ஆய்வு செய்து வந்தது. இதன்படி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக அதிகாரி திமான் சிங், மத்திய மின்துறை இணை இயக்குனர் ரங்கநாத் ஆடம் ஆகியோர் அடங்கிய குழுவினர் தெற்கு பகுதியில் தங்களது ஆய்வை மேற்கொண்டனர். வேளச்சேரி, மடிப்பாக்கம், ரேடியல் சாலை, நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை, தாம்பரம் – வேளச்சேரி நெடுஞ்சாலை, பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோன்று, வடக்கு பிரிவில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன்துறை இணை இயக்குநர் டாக்டர். ஏ. கே. சிவ்ஹரே, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் . விஜயகுமார் மற்றும் பவ்யா பாண்டே உள்ளிட்டோர் சேதம் அடைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  பட்டாளம், புளியந்தோப்பு, கணேசபுரம் சுரங்கபாதை, மணலி, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மத்திய ஆய்வு குழுவினர்கள் குழு இன்று தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அலோசனை நடத்தினர்.  அப்போது மத்தியஅரசின் குழுவினரிடம், மிக்ஜாம் புயல் நிவாரணமாக ஒன்றிய அரசு ரூ.12,659 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். தமிழக அரசு கோரிய புயல் நிவாரணத் தொகையை மத்தியக் குழு பெற்றுத்தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்போது மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோரும் கோரிக்கை மனுவினை (Memorandum) முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய அரசின் ஆய்வுக் குழுவின் தலைவரிடம் வழங்கினார்.

அந்த மனுவில், புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்திடவும், மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், பழுதடைந்த துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட மின்சார உட்கட்டமைப்புகளை சீர் செய்திடவும், பாதிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் தொட்டிகள், தெருவிளக்குகள், கிராம சாலைகள் ஆகியவற்றை சீர் செய்திடவும் இழப்பீடுகள் கோரப்பட்டுள்ளது.

மேலும், மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றிற்கு இழப்பீடுகள் வழங்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடுசெய்திடவும், சாலையோர வியாபாரிகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடவும், தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள சேதங்களைப் பார்வையிட்டு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் முதற்கண் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் கடந்த இரண்டு நாட்கள் நீங்கள் மேற்கொண்ட ஆய்வு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த வெள்ளச் சேதத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு தேவையான எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது. அதேபோல் புயல், மழையின் தாக்கத்திற்கு பிறகு, மீட்பு நிவாரண நடவடிக்கைகளும் முழுவீச்சில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இதனை குறிப்பிட்டு நீங்கள் தமிழக அரசிற்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தீர்கள், அதற்காக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாறு காணாத இந்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட மிகப் பெரிய சேதங்களை சரிசெய்து மீண்டும் உருவாக்கிடவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அதனை மீண்டும் உருவாக்கி வழங்கிடவும் தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரங்கள் மட்டும் போதுமானது அல்ல. ஒன்றிய அரசின் பங்களிப்பும் இதற்கு பெருமளவு தேவைப்படுகிறது. எனவே, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களை மீட்க தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு வகையான சமூக உட்கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்யவும் ஒன்றிய அரசிற்கு நீங்கள் உரிய பரிந்துரை செய்து, தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை பெற்றுத்தர வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

இந்த ஆய்வில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கூடுதல் தலைமைச் செயலர் திரு. ககன் தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் மற்றும் பல்வேறு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.