சென்னை:  மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

அப்போது மத்தியஅரசின் குழுவினரிடம், மிக்ஜாம் புயல் நிவாரணமாக ஒன்றிய அரசு ரூ.12,659 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

கடந்த 14ந்தி சென்னை அருகே ஆந்திர பகுதியில் கரையை கடந்த மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கின. இதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங், மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் ஹெலிகாப்டரில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டனர். இதையடுத்து, வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ. 450 கோடி வழங்கியது. மேலும், மத்திய அரசின் சார்பில் ஒரு குழு தமிழகம் வந்து சேதங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மத்திய குழு டிசம்பர் 11ந்தேதி இரவு சென்னை  வந்தது. மத்திய குழுவின் தலைவராக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர்  குணால் சத்யார்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த குழு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்து வெள்ள சேதத்தை ஆய்வு செய்து வந்தது. இதன்படி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சக அதிகாரி திமான் சிங், மத்திய மின்துறை இணை இயக்குனர் ரங்கநாத் ஆடம் ஆகியோர் அடங்கிய குழுவினர் தெற்கு பகுதியில் தங்களது ஆய்வை மேற்கொண்டனர். வேளச்சேரி, மடிப்பாக்கம், ரேடியல் சாலை, நாராயணபுரம் ஏரி, பள்ளிக்கரணை, தாம்பரம் – வேளச்சேரி நெடுஞ்சாலை, பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதேபோன்று, வடக்கு பிரிவில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன்துறை இணை இயக்குநர் டாக்டர். ஏ. கே. சிவ்ஹரே, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் . விஜயகுமார் மற்றும் பவ்யா பாண்டே உள்ளிட்டோர் சேதம் அடைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  பட்டாளம், புளியந்தோப்பு, கணேசபுரம் சுரங்கபாதை, மணலி, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை கூடுதல் தலைமைச் செயலர் திரு. ககன் தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. கார்த்திகேயன், சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் மற்றும் பல்வேறு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மத்திய ஆய்வு குழுவினர்கள் குழு இன்று தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அலோசனை நடத்தினர்.  அப்போது மத்தியஅரசின் குழுவினரிடம், மிக்ஜாம் புயல் நிவாரணமாக ஒன்றிய அரசு ரூ.12,659 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். தமிழக அரசு கோரிய புயல் நிவாரணத் தொகையை மத்தியக் குழு பெற்றுத்தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர்செய்திட தற்காலிக நிவாரணத் தொகையாக 7033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் வழங்கிட முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.