கோவை: மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுதும், ஒரே கட்டமாக, வரும் 6ம் தேதி சட்டசபைக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல், 12ம் தேதி துவங்கியது. நேற்று மாலை, 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு அடைந்தது.

மொத்தம் 6,620க்கும் மேற்பட்டோர், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அதிக பட்சமாக, கரூர் தொகுதியில், 94க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்து இருந்தனர். அனைத்து வேட்பு மனுக்களும், இன்று காலை, 11:00 மணிக்கு பரிசீலனை செய்யப்பட்டன.

இந் நிலையில் பரிசீலனையின் போது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. அந்த தொகுதியில் மநீம சார்பில் ராஜ்குமார் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

வேட்பு மனுவில் பதிவு செய்யப்படாத கட்சி என்ற இடத்தில் கட்சி பெயரை எழுதாமல், அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வரிசையில் கட்சி பெயரை நிரப்பியதால் அவரது மனு நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.