வாஷிங்டன்: 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னதாக, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், அமெரிக்க துணைஅதிபர் கமலாஹாரிஸ்-ஐ சந்தித்து பேசினார். தொடர்ந்து நேற்று அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து இன்று ஐ.நா.வில் உரையாற்றுகிறார்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு வாஷிங்டனில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 22ந்தேதி  அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அவருடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

குவாட் உச்சி மாநாடு நடைபெறும் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறைக்கு அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி, பிரதமர் யோஷிஹிடே சுகா மற்றும் பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆகியோர் சென்றனர். இதனை தொடர்ந்து குவாட் உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்த குவாட் உச்சி மாநாட்டில் நேரில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்த ஜோ பைடனுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், அங்கு உரையாற்றிய மோடி  ,உலக நன்மைக்கான சக்தியாக குவாட் கூட்டமைப்பு இயங்கும் என  கூறினார்.

இன்று உலகம் கொரோனாவுடன் போராடும்போது, குவாட் உறுப்பினர்கள் மீண்டும் மனிதநேயத்தின் நலனுக்காக ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, குவாட் தடுப்பூசி முயற்சி இந்தோ-பசிபிக் பிராந்திய மக்களுக்கு நிச்சயம் உதவும் , உலக நன்மைக்கான சக்தியாக இந்த குவாட் கூட்டமைப்பு இயங்கும் எனவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, குவாட்டில் எங்கள் ஒத்துழைப்பு இந்தோ-பசிபிக் மற்றும் முழு உலகிலும் அமைதியையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று தாம் நம்புவதாகவும் கூறினார்.

முன்னதாக அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசிய பிரதமர் மோடிக்கு, இந்தியா வம்சா வழியினர் பரதநாட்டியமாடி உற்சாகமாக வரவேற்றனர. அதைத் தொடர்ந்து அதிபர் பைடனுன்  இரு நாட்டின் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து  முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும்,  இரு தரப்பு உறவு மேம்பாடு, ஆப்கான் விவகாரம் மற்றும் இந்தோ பசிபிக் பெருங்கடலில் சீன ஆதிக்கம் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

முன்னதாக அமெரிக்காவில் உள்ள   பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி, அவர்களிடம் , இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். மேலும், அந்நாட்டு துணை அதிபரான இந்திய வம்சாவழியைச் சேர்ந்த  கமலா ஹாரிசுடன் ஆலோசனை நடத்தியதுடன், அவரை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதனை தொடர்ந்து நியூயார்க்கில் இன்று நடைபெற உள்ள ஐ.நா. பொது சபையின் 76 வது அமர்வில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். இதில் கலந்து கொள்வதற்காக தற்போது பிரதமர் மோடி வாஷிங்டனில் இருந்து விமானம் மூலமாக நியூயார்க் புறப்பட்டுச் சென்றுள்ளார்.