மதுராந்தகம்: வேல் யாத்திரையில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற நடிகை குஷ்புவின் கார் மதுராந்தகம் அருகே  டேங்கர் லாரிமீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், குஷ்பு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். முருகன் அருளால் தான் காப்பாற்றப்பட்டதாக குஷ்பு தெரிவித்து உள்ளார்.

பாஜகவின் வேல் யாத்திரையில் கலந்துக் கொள்வதற்காக நடிகை குஷ்பு தனது காரில் கடலூரை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார். கார் மேல்மருவத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் நடிகை குஷ்புவின் கார், முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் குஷ்பு உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் முழுவதுமாக சேதமடைந்ததால், மாற்று கார் ஏற்பாடு செய்து அதன் பின்னர், கடலூர் நோக்கி குஷ்பு புறப்பட்டு சென்றார்.

இந்த விபத்து குறித்து நடிகை குஷ்பு,  அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மேல்மருவத்தூர் அருகே இன்று ஒரு விபத்தை சந்திக்க நேரிட்டது. ஒரு டேக்கர் லாரி எனது கார் மீது மோதி விட்டது.  உங்கள் ஆசிர்வாதம்மற்றும் கடவுளின் கிருபையுடன்  நான் பாதுகாப்பாக இருக்கிறேன். கடவுள் முருகன் தான் என்னை காப்பாற்றினார். வேல் யாத்திரையில் பங்கேற்க கடலூருக்கு சென்று கொண்டிருக்கிறேன். என் கணவர், முருக கடவுளின் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகவில்லை.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.