சென்னை: தமிழ்நாடு முழுவதும் 12-ந் தேதி 43 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாமை தமிழ்நாடு சுகாதாரத்துறை நடத்துகிறது. அது தொடர்பான  வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

கொரோனா தொற்று பரவலில் இருந்து மக்கள் தங்களது உயிரை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மட்டுமே தீர்வு என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து,  தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில், வரும் 12ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம்  முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது. அதற்கான  வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,

ஒரு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தவும், அதனை பதிவு செய்யவும் தலா ஒருவர், 2 அங்கன்வாடி ஊழியர்கள் என மொத்தம் 4 பேரை நியமிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தும் பணியில் நர்சுகளும், அதனை பதிவு செய்யும் பணியில் ஆசிரியர்கள், பொது சேவை மைய பணியாளர்களும் நியமிக்கப்படலாம்.

அதேபோல், கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் டோக்கன் வழங்கும் பணிகளுக்கு வருவாய்த்துறை, உணவு பொருள் வழங்கல் துறை போன்ற துறை பணியாளர்களையும் ஈடுபடுத்தலாம்.

தடுப்பூசி செலுத்தும் இடங்களில் சாமியானா பந்தல், இருக்கைகள், குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்.

அந்த பகுதி போலீஸ் நிலையத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்காக போலீசாரை நியமித்து, பயனாளர்களை வரிசையில் நிற்க செய்யவேண்டும்.

ஒரு மேற்பார்வையாளர் தடுப்பூசி செலுத்தும் 5 முதல் 8 இடங்களை பார்வையிட வேண்டும்.

இந்த மெகா தடுப்பூசி முகாம் நடப்பது குறித்த பிரசாரம் அனைத்து பகுதிகளிலும் செய்யப்பட வேண்டும்.

மெகா தடுப்பூசி முகாம் நடக்கும் நாளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் உள்பட பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுஉள்ளது.

தமிழகம் முழுவதும் வழக்கமாக தடுப்பூசி செலுத்தப்படும் 40 ஆயிரத்து 399 இடங்களுடன், கூடுதலாக 2 ஆயிரத்து 652 இடங்கள் சேர்த்து மொத்தம் 43 ஆயிரத்து 51 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட இருப்பதாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்கள் பயன்பெறும் வகையில் இந்த தடுப்பூசி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  கூடுதலாக சேர்க்கப்படும் இடங்கள் இதுவரை தடுப்பூசி செலுத்தப்படாத இடங்களில் அமைக்கப்படுவதை உறுதி செய்யவும்  அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் வெளியிட்டுள்ளார்.