சென்னை:
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில், மருத்துவ அறிவியல் மாநாட்டை தொடங்கி முதலமைச்சர் ஸ்டாலின் வைத்தார்.

இந்த மாநாட்டில் பேசிய முதல் அமைச்சர், மருத்துவ அறிவியல் மாநாடு தமிழில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த முத்தமிழ்பேரவையில் தமிழில் மருத்துவ அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. முத்தமிழ் பேரவையில் நடைபெறும் இந்த மாநாட்டை பார்ப்பதற்கு கலைஞர் இருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், மருத்துவ நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழை, தமிழே என்று சொல்லும் போது கிடைக்கும் சுகம் எங்கும் கிடைப்பதில்லை. நிர்வாகத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ், இதனை வலியுறுத்தும் மற்றும் செயல்படுத்தும் அரசாக திமுக அரசு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.