திருப்பாவை – பாடல் 27  விளக்கம்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும்.

அந்தவகையில், மார்கழி மாதத்தின் 27 ஆம் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 27

திருப்பாவை பாடல் 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

நோன்பு இருக்கும் நாங்கள், சன்மானம் பெற்று மகிழுமாறு அருள் புரிய வேண்டும் – என வேண்டும் பாடல் இது. எதிரிகளை வெல்கின்ற குணங்களை உடைய கோவிந்தனே! உன்னைப் பாடி, உன்னிடம் நாங்கள் வேண்டுகின்ற பறையைப் பெற்று, அதன் பின்னும் நாங்கள் பெறும் சன்மானம் என்ன தெரியுமா?
 
உலகத்தில் உள்ளோர் புகழும் படியாக, கையில் அணியும் ஆபரணங்கள், தோளில் அணியும் பரணங்கள், காதில் அணியும் தோடு, காதை மேலும் அலங்காரம் செய்யும் ஆபரணங்கள், காலில் அணியும் ஆபரணங்கள் என்று சொல்லப்படும் பலவகையான ஆபரணங்களை எங்களுக்கு கொடு. அதன் பிறகு, பால் சோறு மறையும்படியாக நெய்யை ஊற்றி, அது முழங்கையில் வழியும்படியாக உண்டு, நீயும் நாங்களுமாகக் கூடி இருந்து குளிர வேண்டும்.