திருப்பாவை – பாடல் 22  விளக்கம்

மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.  இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும்.

அந்தவகையில், மார்கழி மாதத்தின் 22 ஆம் நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல் 22

திருப்பாவை பாடல் 22

அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல

செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்:

இந்தப் பாசுரத்தில் கோபியர்கள் கண்ணனின் அருளைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கோபியர்களே! நீங்கள் எல்லோரும் வந்த காரணம் என்ன? என்று கண்ணன் கேட்கிறான். உன்னை விட்டுப் பிரிந்திருந்த சாபம் நீங்கவேண்டும். இனியும் அப்படி ஒருநிலை ஏற்படக்கூடாது. அழகு, விசாலம், போகப் பொருள்கள் நிறைந்த இந்த பூமியில் வாழும் அரசர்கள் தங்களது அபிமானம் இழந்து, உன்னுடைய அருள் நோக்கே வேண்டும் என்று கூட்டங் கூட்டமாக திருப்பள்ளி அறையின் வாசலில் நிற்பதுபோல், நாங்களும் ஸ்த்ரீத்வ அபிமானம் இழந்து வந்து நிற்கிறோம். உன்னை வந்து அடைவோமோ என்று எண்ணினோம், அடைந்துவிட்டோம். கிண்கிணியைப் போன்று இருக்கும் அழகிய தாமரைக் கண்ணால் எங்களை மெல்ல கடாக்ஷிக்க வேண்டும்.

வாடிய பயிரின் மேல் ஒரு பாட்டம் பெருமழை பொழிவதுபோல் இல்லாமல், மாத உபவாசிக்குப் புறச்சோறு இடுவதுபோல் கொஞ்சம் கொஞ்சமாகக் கடாக்ஷிக்க வேண்டும். ஒருவன், ஒருமாத காலம் பட்டினி இருந்தால், ஒரு மாதத்திற்குப் பிறகு, அவனுடைய உடலுக்கு உணவுச்சத்து பிடிப்பதற்கு, சோற்றை நன்கு அரைத்து உடம்பில் பூசுவார்களாம். இது முற்காலத்தில் செய்யும் வைத்தியம். இதனால் உடம்பில் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக வரும். அதுபோல் நீ சிறிது சிறிதாகப் பார்த்தால், உன்னை விட்டுப் பிரிந்திருக்கும் பிரிவாற்றாமை என்னும் நோய் நீங்கும். சூரியனையும் சந்திரனையும் போன்ற கண்களால் எங்களைக் கடாக்ஷித்தால் எங்கள் மீது இருக்கும் சாபமும் நீங்கும்.