சென்னை

சென்னை தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் குதிரை வண்டி சவாரியை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்

சென்னை தினத்தைக் கொண்டாடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விதமான போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு பகுதியாக இன்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான குதிரை வண்டி சவாரியினை சென்னை மேயர் பிரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

3 வண்டிகள் மூலம் இந்த குதிரை வண்டி சவாரி நடைபெற்றது.

சராசரியாக ஒவ்வொரு வண்டிக்கும் 7 குழந்தைகள் பங்கு பெற்ற குதிரை வண்டி சவாரி விக்டோரியா ஹால், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன், தெற்கு ரயில்வே தலைமையகம், சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று மீண்டும் ரிப்பன் கட்டிடத்திற்குத் திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் 60 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் கூடுதல் தலைமைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலைமை செயல் அலுவலர் லட்சுமிமேனன், மாமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி உட்படப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.