சென்னை,

17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்பட, நான்கு பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே 21ம் தேதி தடையை மீறி மெரினாவில், ஈழத்தமிழர்களுக்காக நினைவேந்தல் கூட்டம் நடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் மே17இயக்கத்தை சேர்ந்த 4 பேர் மீது தமிழக காவல்துறை குண்டர் சட்டத்தை ஏவி கைது செய்துள்ளது.

கடந்த  2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும்,  ராணுவத்துக்கும் நடைபெற்ற போரின்போது லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான  முள்ளிவாய்க்காலில்  மே 17ம் தேதி இலங்கை ராணுவத்தின் கொடூர தாக்குதலில் லட்சக்கணக்கான தமிழர்கள் பலியானார்கள்.

இதன் நினைவாக ஆண்டுதோறும் சென்னை மெரினாவில் மே 17 இயக்கம் சார்பில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

இந்த ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டும், போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். அதைத்தொடர்ந்து தடையை மீறி நினைவேந்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, மே 2ஆம் தேதி தடையை மீறி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் நிர்வாகிகள் டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் தலைமை யில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து, சட்டவிரோதமாக கூடியதாககூறி திருமுருகன் காந்தி உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நான்கு பேரும் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் இன்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருமுருகன் காந்தி மீது 17 வழக்குகள் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

மே17 இயக்கத்தினர்மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.