2mouli
சென்னை:
டந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி கட்டிடம்  இடிந்துவிழுந்து 61பேரை பலி வாங்கியது. அந்த  கட்டிடத்தின் இணை கட்டிடமான 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது.
சென்னை மௌலிவாக்கத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 11 அடுக்குமாடி கட்டடம் புதன்கிழமை (நவ.2) இடிக்கப்பட உள்ளது என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் சி.விஜயராஜ்குமார் அறிவித்துள்ளார்.
இந்தக் கட்டடம் அன்றைய தினம் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை இடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் பெயரில் தமிழக அரசின் சார்பில் அறிக்கை வெளியாகி உள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த 11 மாடி குடியிருப்பு 2014 ம் ஆண்டு ஜூன் 28-ந் தேதியன்று மழையின் போது மளமளவென இடிந்து சரிந்து விழுந்தது. இந்த விபத்தில், கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.
தீயணைப்புதுறையினர், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் இணைந்து  மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவும் பகலுமாக ஒருவாரம் நீடித்த மீட்புப் பணியில் 50க்கும் மேற்பட்டோர் காப்பாற்றப்பட்டாலும், இடிபாடுகளில் சிக்கி 61 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பான்மையானோர் ஆந்திராவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள்.
1mouli
இதையடுத்து அருகில் உள்ள மற்றொரு 11 மாடி கட்டிடத்தையும்  இடிக்க காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து கட்டிட நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அதை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டும் நிராகரித்து விட்ட நிலையில் கட்டிடத்தை இடிப்பதற்கான ஏற்பாடுகளை சிஎம்டிஏ அதிகாரிகள் தொடங்கினர்.
தமிழக அரசு மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் இந்த கட்டிடத்தை இடித்து தகர்க்கும் பணியை ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து இருந்தனர். அவர்கள் கட்டிடத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி வந்தனர்.
இதுகுறித்து தமிழக அரசின் அறிக்கையில் கூறி இருப்பதாவது
இந்த 11 அடுக்குமாடி கட்டடத்தை இடிக்க நவீன உள் வெடிப்பு தொழில்நுட்ப முறை (“இன்ப்ளோஷன்’ பயன்படுத்தப்பட உள்ளது. அதாவது, வெடி மருந்து கள் பயன்படுத்தி, பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்து, அதே இடத்தில் கட்டடம் உள்நோக்கி விழும் வகையில் இடிக்கப்பட உள்ளது.
பாதுகாப்புக்கு..: இடிக்கப்பட உள்ள இந்த கட்டடத்தைச் சுற்றி 100 மீ சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து கட்டடங்களின் நிலை, பொதுப்பணித் துறை, சிஎம்டிஏ உள்ளிட்டவை மூலம் ஆய்வு செய்யப்பட்டன. மேலும் பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு விரிவான பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
தாற்காலிக தங்குமிடம்-ஆம்புலன்ஸ் வசதி: பொதுமக்கள் தாற்காலிகமாக தங்குவதற்கு மதனந்தபுரம் பிரதான சாலையிலுள்ள ஸ்ரீ எஸ்.ஏ.கே. ஜெய் மாருதி மஹால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தங்குமிடத்துக்குச் செல்ல கட்டணமில்லா பேருந்து வசதியும், இரண்டு தீயணைப்பு வாகனங்கள், நான்கு அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல், 100 மீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கட்டடம் இடிப்பது குறித்தும், மாற்று இடத்துக்குச் செல்வது குறித்தும் தனித்தனியாக அறிவிப்பு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் வழங்கப்பட உள்ளன.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே…: மேலும் கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்பு காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் வெளியேறிவிட்டார்களா என்பதை உறுதி செய்த பின்புதான் இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
பீதி வேண்டாம்: கட்டடம் இடிக்கப்படுவது குறித்து அப்பகுதி பொதுமக்கள் எவ்வித அச்சமோ, பீதியோ அடையத் தேவையில்லை.
கட்டடம் இடிக்கப்படும் பணி முடிவடைந்தவுடன் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு உரிய அறிவிப்பு வழங்கப்படும்.
எனவே அப்பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடமாக இன்று இடிக்கப்படும், நாளை இடிக்கப்படும் என்று  உலா வந்த வதந்திகளுக்கு நாளை யோடு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.