சென்னை

மிழக அரசின்12 மணி நேர வேலை அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக முதல்வர் அறிவித்ததை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இன்று மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கொடியேற்றி சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் குணசேகரன் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

விழா முடிவில் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “இன்று 138-வது மே தின விழா. ‘8 மணி நேர வேலை’ என்பதை உழைக்கும் மக்கள் கரத்தாலும், கருத்தாலும் ரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற நாள் இது.   இன்று உலகத் தொழிலாளர்களின் உரிமைக்கான, மனித இனத்துக்கான நாள்.

அடுத்த ஆண்டு இதே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மத்திய பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகாலமாக உழைப்பாளி மக்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது‌. மத்திய அரசு 44 தொழிலாளர் சட்டங்களில் 15 சட்டங்களை அறவே ஒழித்து 29 தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி உள்ளது.

தமிழக அரசு 12 மணி வேலை மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெறுவதாக முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தது வரவேற்கத்தக்கது.  தமிழக சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட போதே இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது.   அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்த்தன” எனத் தெரிவித்துள்ளார்.