சென்னை:
எம்.பி வெங்கடேசனை அமைச்சர் உதயகுமார் மிரட்டும் வகையில் பேசுவதாக மார்க்சிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது.

தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக நோய்த் தொற்று தினம்தோறும் 100 என்ற எண்ணிக்கையை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.

இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், மதுரை மாவட்டத்தில் தொற்று பரவும் வேகமானது 7.9 சதவீதமாக இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளதை சுட்டிக்காட்டியிருந்ததோடு, இதே ரீதியில் சென்றால் ஜூலை 21-ஆம் தேதி மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 7,883 ஆக இருக்கும் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். ஜூன் 4-ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக இதுகுறித்து எடுத்துக்கூறியும் எதுவும் நடக்கவில்லையென்றும் அதில் சுட்டிக்காட்டினார்.

 

இந்த நிலையில், மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “முதல்வருக்கு கடிதம் எழுதுவதாக கூறி, எம்.பி வெங்கடேசன் மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறார். தவறான தகவல்களை பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 28) வெளியிட்ட அறிக்கையில்,

மக்கள் பிரதிநிதி என்ற முறையில் தன்னுடைய தொகுதி மக்களின் உயிர் பாதுகாப்பிற்காக சு.வெங்கடேசன் மாநில முதல்வருக்கு கடிதம் எழுதி கவனத்தை ஈர்ப்பது பீதியைக் கிளப்புவதாகுமா? மக்கள் பிரதிநிதிகள் முன்வைக்கும் கோரிக்கைகளையே இவ்வாறு திசைதிருப்பி மிரட்டும் அமைச்சர் சாதாரண மக்களின் குரலுக்கு மதிப்பளிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில சுகாதாரத்தறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “சென்னை நிலை மதுரைக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால், நிலைமையின் விபரீதத்தை உணராமல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மக்கள் பிரதிநிதிகளையே மிரட்டுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று சாடிய பாலகிருஷ்ணன், அமைச்சர் இந்தப் போக்கை கைவிட்டு மதுரை உட்பட தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் மீட்பு, நிவாரணப்பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.