இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி ஒன்றுக்கு இன்று திருமணம் நடத்தப்பட்டது.

திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் கிராமத்தைச் சேர்ந்த தசரதனின் மகள் ஜீவிதா. இவர் தனது உறவுக்காரரான சேலை கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். டில்லிபாபு திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசமாக இருந்தார். இதில் ஜீவிதா கர்ப்பமானார். இந்நிலையில் டில்லி பாபு திருமணம் செய்ய மறுத்ததோடு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவிதா திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ராதேவியிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வேலை வி‌ஷயமாக ஆந்திரா மாநிலம் கடப்பாவில் இருந்த டில்லிபாபுவை அழைத்து வந்தனர்.

போலீசார் இரு வீட்டார் பெரியவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இரு குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் டில்லிபாபு தரப்பில் அதற்கு நீண்ட நேரம் மறுப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து திருமணம் நடத்தி வைக்க பேச்சு வார்த்தையில் பெற்றோர்கள் சம்மதித்தனர். அதைத்தொடர்ந்து காலை 10 மணி அளவில் திருவள்ளூரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடந்தது.

டி.எஸ்.பி கங்காதரன் தாலி எடுத்து கொடுக்க டில்லிபாபு ஜீவிதாவின் கழுத்தில் தாலியை கட்டினார். இதனால் காலை முதல் நீடித்த திருமணப் போராட்டம் முடிவுக்கு வந்தது. சுமுகமாக திருமணம் நடந்ததால் இருவீட்டாரும் மகிழ்ச்சி அடைந்தனர்.