தலப்புலா, கேரளா

கேரள மாநிலத்தில் காவல்துறைக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், பீகார், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் உள்ளது. இன்மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் அவ்வப்போது பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

மாநில அரசுகள் மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. தற்போது கேரளா, தமிழ்நாடு வனப்பகுதிகளிலும் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.  கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தலப்புலாவில் உள்ள வனப்பகுதியி ல் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நேற்று இரவு காவல்துறை சிறப்புப் படையினர் வனப்பகுதியில் திவீர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்ட்டுகள் காவல்துறையினர்  மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். காவல்துறையினர் மாவோயிஸ்ட்டுகள் மீது பதில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.  இவ்வாறு தொடரும் மோதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.