சென்னை:
சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் வராததால் கமல் அதிருப்தி அடைந்தார்.

மக்கள் நீதி மய்யம் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி துவங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக உள்ளார். இந்த நிலையில் இன்று அக்கட்சியில் 4வது ஆண்டு தொடக்க விழா சென்னை மேற்கு தாம்பரத்தல் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சி 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. போதாகுறைக்கு, தொண்டர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை.

காலை 10 மணிக்கு தொடக்க விழாவுக்கு கேரவனில் வந்த கமல்ஹாசன் 2 மணி நேரம் கேரவனிலேயே காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. 10 ஆயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

8 ஆயிரம் பேர் விழாவுக்கு வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில், 3 ஆயிரம் பேர் கூட வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தொண்டர்கள் வராததால் கமல்ஹாசன் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.