கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார்.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்வராகப் பதவி ஏற்று 6 மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்க வேண்டும் இல்லாவிட்டால் முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் சட்டமன்ற உறுப்பினரும், வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. பாஜக சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.
செப்.30-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதுபோலவே ஜங்கிபூர் மற்றும் சமஸ்ர்கஞ் ஆகிய தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இன்று அங்கு, வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில்,  மேற்குவங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 58,800 வாக்குகள் பெற்ற மம்தா பானர்ஜி அபார வெற்றி பெற்றார்.
இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.