விஜய் ஹீரோவாக நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளதால், அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே, மாளவிகா மோகனன், தமிழகத்தில் பிரபலமாகி விட்டார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்தி உள்ளிட்ட எல்லா மொழி படங்களிலும் நாயகனுடன் காதல், இரண்டு பாடல் காட்சி என கதாநாயகிகளை ஏனோ தானோ என்றே பயன்படுத்திக்கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்” என்று அங்கலாய்த்தார்.

“காதல் காட்சிகளில் நடிப்பதை விட சண்டை காட்சிகளில் நடிப்பதில் தனக்கு விருப்பம் அதிகம்” என்று தெரிவித்த மாளவிகா ‘மாஸ்டர்’ பட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

“மாஸ்டர் படத்தில் எனக்கு முக்கியமான வேடம், கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளேன். குடிகார கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ளார்.

அவருக்கும் ’கேங்க்ஸ்டர்’ கும்பலை சேர்ந்த விஜய் சேதுபதிக்கும் ஒரு விவகாரத்தில் மோதல் ஏற்படுகிறது’’ என்று நிறுத்தியவர், “ஆனால் மாஸ்டர் படத்தில் எனக்கு ஆக்‌ஷன் காட்சிகள் ஏதும் இல்லை” என்றார்.

தமிழில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக தற்போது நடிப்பதாக தெரிவித்த மாளவிகா, இன்னொரு ‘ஆக்‌ஷன்’ படத்தில் நடிக்க பேச்சு நடப்பதாக குறிப்பிட்டார்.

– பா. பாரதி