மதுரை: கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டத்தை மாநில அரசால் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவம் உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா? என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்டதேவி கோயில் தேர் வெள்ளோட்டம் தாமதம் ஆகிவருவதற்கு உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

கண்டதேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் பழைய தேர் பழுதான நிலையில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. புதிய தேர் வெள்ளோட்டம் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது. தேர் வெள்ளோட்டம் நடத்தக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் 2019-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது புதிய தேர் விரைவில் வெள்ளோட்டம் விடப்படும். அதன் பிறகு கோயில் விழாக்களில் தேரோட்டம் நடத்தப்படும் என அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்டு வழக்கு முடிக்கப்பட்டது. இருப்பினும் இதுவரை தேர் வெள்ளோட்டம் நடைபெறவில்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அறநிலையத் துறை இணை ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.  இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்,  கோயிலில் புதிய தேர் தயாராக உள்ளது. பல பிரிவினர் பிரச்சினை செய்வதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது.  அதனால், வெள்ளோட்டம் சம்பந்தமாக முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பதற்றமான சூழல் காரணமாக சமரசக் கூட்டம் நடத்துவதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றார்.

இதையடுத்து  கருத்து தெரிவித்த நீதிபதி,

  • “சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் பல பிரிவினர் ஒற்றுமையில்லாமல் இருப்பது வேதனையானது.
  • பிரச்சினைக்குரிய பிரிவினர்களை அழைத்து அரசால் ஒரு கூட்டம் கூட போட முடியாதா?
  • பல கோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்?
  • அரசின் நடவடிக்கை திருப்தியாக இல்லை.
  • மாநில அரசால் தேர் வெள்ளோட்டம் நடத்த முடியாவிட்டால் துணை ராணுவனத்தினரை கொண்டு வெள்ளோட்டம் நடத்த உத்தரவிடலாமா?
  • அனைத்து பிரிவு மக்களின் உணர்வுகளையும் அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

தேர்தல் நெருங்கிவிட்டதால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறுவதை ஏற்கிறோம். இருந்தாலும், தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து நவம்பர் 17ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், விசாரணையை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.