மும்பை.

து விற்பனையை அதிகரிக்க மது வகைகளுக்கு பெண்கள் பெயர்களை வைக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அமைச்சர்  யோசனை கூறியிருந்தார்.

இதற்கு கூட்டணி கட்சியான  சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மராட்டிய மாநிலத்தில் பா.ஜ.க. – சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவி வகித்து வருகிறார். இவரது அமைச்சரவையில் கிரிஷ் மகாஜன் என்பவர் அமைச்சராக இருக்கிறார்.

இவர்  சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்பேசும்போது, மாநிலத்தில் மது விற்பனை குறைந்துள்ளது. தற்போது நாட்டில் உள்ள மது வகைகளுக்கு மகாராஜா போன்ற ஆண் பெயர் வைத்துள்ளோம். இதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இதுபோன்ற பெயர்களுக்கு பதிலாக ராணி என பெண் பெயரை வைத்தால் மதுவின் விற்பனை அமோகமாக இருக்கும் என்றும், ஆண்களின் பெயருக்கு பதிலாக  பெண்களின் பெயர்களை வைத்துப் பாருங்கள் விற்பனை நிச்சயம் அதிகரிக்கும் என கூறினார்.

மாநில பாஜ  அமைச்சரின் இந்தக் கருத்து நாடு முழுவதுழம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அமைச்சரின் பேச்சு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகளிர் அமைப்பினர் புகார் கொடுத்துள்ளனர்.

அதேபோன்று, பாஜவின்  கூட்டணி கட்சியான சிவசேனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சி பத்திரிகையான சாம்னாவில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில்,  மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மராட்டிய அரசு பிரசாரம் செய்கிறது. ஆனால், மது விற்பனையை அதிகரிக்கும் விதமாக அமைச்சர் பிரசாரம் செய்கிறார்.  பிகாரில் மதுவிலக்கை அமல்படுத்தியதற்காக முதல்வர் நிதிஷ்குமாரை பிரதமர் மோடி பாராட்டுகிறார்.

ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்த, மராட்டிய அமைச்சர் மது விற்பனையை ஊக்குவிக்கிறார். மேலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அவருடைய யோசனைகள் உள்ளன என குற்றம் சாட்டியுள்ளது.

இதற்கிடையே, மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கிரிஷ் மகாஜன், தான் கூறிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.