தானே:
பாரதியஜனதா கட்சியின், தாமரை சின்னத்தை அழுத்தினால், அது தானாகவே பாகிஸ்தான் மீது ஒரு அணு குண்டு வீசப்படும் என அர்த்தம் என்று மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில், உ.பி. மாநில பாஜக துணை முதல்வர் பேசவ் பிரசாத் மவுரியா பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, அரியான மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 21ந்தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெறும்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நாட்டில் நடக்கும் முதல் தேர்தல்கள் இதுவாகும் என்பதால், நடைபெற உள்ள மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மிக முக்கியமானவை. பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்த நிலையில், உத்தரபிரதேச துணை முதல்- மந்திரி கேசவ் பிரசாத் மவுரியா, மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மீரா பந்தர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மேத்தாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது,
மக்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால், அது தானாகவே பாகிஸ்தான் மீது ஒரு அணு குண்டு வீசப்படும் என அர்த்தம் என்று கூறியவர், தயவுசெய்து பாஜகவுக்கு வாக்களித்து மராட்டிய மாநிலத்தில் எங்கள் கட்சியை மீண்டும் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கெஞ்சினார்.
நடைபெற உள்ள தேர்தல்களில் தாமரை நிச்சயமாக மலரும் என்று நான் நம்புவதாக கூறியவர், லட்சுமி தேவி பனைமரத்திலோ, சைக்கிளிலோ அல்லது கடிகாரத்திலோ உட்காரவில்லை, மாறாக அவள் தாமரையின் மீது அமர்ந்திருக்கிறாள் என்றும், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து, 370-வது பிரிவு தாமரையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. தாமரை என்பது வளர்ச்சியின் சின்னம்.
இவ்வாறு கூறினார்.