சென்னை: மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணி அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் நிறைவு பெறும் என அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

தமிழக சட்டப்பேரவையின் 2021ம் ஆண்டு  பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போது மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன அப்போது, மதுரையில் சர்வதேச தரத்தில் ரூ.114 கோடி செலவில்  கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மதுரை புதுநத்தம் சாலையில், அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து, கலைஞர் நூலகம் கட்டுமான பணிக்கான அடிக்கல் 2022ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்றது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு,  மதுரையில் அமையவிருக்கும் கலைஞர் நினைவு நூலகக் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது இந்த கட்டுமானப்பணிகள் அடுத்த மாதம் 30ம் தேதிக்குள் 100% நிறைவு பெறும் என்றார். மேலும், மதுரையில் ரூ.900 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில், முடிக்கப்பட்ட பணிகள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தேனி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஐந்து புறவழிச் சாலைகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.