துரை

காற்று மாசாவதைத் தடுக்க ரூ.475.35 கோடி செலவில் திட்டம் ஒன்றை மதுரை மாநகராட்சி தயார் செய்துள்ளது.

உலகெங்கும் காற்று மாசாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக நகர்ப்புறங்களில் மோசமான சாலை பராமரிப்பு, வாகனங்களில் வெளியேறும் மிக அதிகமான புகை மற்றும் பெருகி வரும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக் கழிவுகளால் சுற்றுப்புறக் காற்றின் தன்மை மாசடைகிறது. தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள காற்று மாசு நகரங்கள் பட்டியலில் காற்று மாசுபாடு அதிகமுள்ள சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி நகரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

மதுரை மாநகராட்சி ஆணையாளர் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், “கடந்த 2018 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தேசிய தூய்மையான காற்று திட்டத்தை வெளியிட்டு நாட்டிலுள்ள காற்றின் தர அளவை எட்ட முடியாத 124 நகரங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.  இதில் தமிழகத்தில் அதிகம் காற்று மாசு அடையும் நகரங்களில் மதுரை இடம்பெற்றிருக்கிறது.  சாலை மாசுகள், கட்டுமானத்தால் ஏற்படும் மாசுகள், வாகனப் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் மாசுகளால் மதுரையில் காற்று மாசு ஏற்படுகிறது.

இதைக் குறைக்க 2022-2023 முதல் 2025-2026 முடிய ஐந்தாண்டு  காலத்திற்கான நகர செயல் திட்டம் தயார் செய்து அதற்கு தேவையான நிதியினை கணக்கிட்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   இதற்கு ரூ.475.35 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.   அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவு பெறும்போது மதுரை மாநகரின் காற்று மாசு தேசிய காற்று மாசு அளவான 60ug/m3 மற்றம் உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள காற்றுமாசு அளவான 20ug/m3-ஐ எட்ட இயலும்.” எனத் தெரிவித்துள்ளார்.