சென்னை: தங்களது வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என  தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடை கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து பாஜக தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

திமுக அமைச்சர்கள் பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்பட பல்வேறு அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும், தமிழக லஞ்ச ஒழிப்பு காவல்துறை பச்சோந்தி போல் செயல்படுகிறது என கடுமையாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திமுக அமைச்சர்கள் மீதான வழக்கை தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்தார்.

கீழமை நீதிமன்ற   உத்தரவுகளை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யாத நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து சீராய்வு மனுக்களை விசாரணைக்கு எடுத்தார். இதுதொடர்பாக நீதிபதி மீது திமுகவின் ஆர்.எஸ்.பாரதி நேரடியாகவே குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மறு ஆய்வு வழக்குகளில் இருந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விலக வேண்டும் எனவும், வேறு நீதிபதி விசாரிக்கவும் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும்,  திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்குகளை நானே விசாரிப்பேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், திமுக அரசு கடும் அதிருப்தி அடைந்தது.

இதற்கிடையில், இந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி பொன்முடி வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். இதனால், அதிர்ச்சி போன திமுக அரசு செய்வதறியாமல்திகைத்தது. இதற்கிடையில்,  சுழற்றி முறையில் மதுரைக்கு மாற்றப்பட்ட நீதிபதி வெங்கடேசன் மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி வந்த நிலையில், இந்த வழக்குகள் அனைத்தும் மீண்டும் அவரிடமே விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்து குவிப்பு மறு ஆய்வு வழக்குகளின் விசாரணை பிப்ரவரி 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை தினசரி அடிப்படையில் நடைபெறும் என நீதிபதி அறிவித்துள்ளார். மேலும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் பிப்ரவரி 19ம் தேதி முதல் 22ம் தேதி வரையும், அமைச்சர் ஐ. பெரியசாமி வழக்கில் பிப்ரவரி 12ம் மற்றும் 13ம் தேதிகளிலும் விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை பதில் மனு அல்லது எழுத்துப்பூர்வ வாதமாக ஜனவரி 30ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தியிருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள  அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதில், உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் தொடர்ந்துள்ள வழக்குகள் தொடர்பாக தமிழ்நாடு பாஜக மற்றும் அதிமுகவின் ஜெயக் குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருவருடைய வழக்குகளிலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று அதில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2006-2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசுவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரனும் பதவி வகித்தனர். இந்த காலக் கட்டத்தில், இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இரண்டு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லாததால் இருவரையும் விடுவித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்! உயர்நீதிமன்ற நீதிபதி ‘ஓப்பன் டாக்..!’

திமுக அமைச்சர்கள்மீதான ஊழல் வழக்கில் வழக்கிலிருந்து விலக போவதில்லை! உயர்நீதிமன்ற நீதிபதி உறுதி…